------------------------------------------------------------
பட்டிமேய்ந்து -துரீய அவஸ்தை-வைகுண்டம்
------------------------------------------------------------
கண்ணனுக்கு நாச்சியாருக்கும் வாசி யாது ?
------------------------------------------------------------
[குறிப்பு:- உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் அருளிச்செயல் என்பவருக்கே இக்கட்டுரை இனிக்கும். [குருகூர் நம்பி என்னக்கால் நாவிலே அண்ணிக்கும் அமுது ஊறுவார்க்கு]. ரத்தம் சதை நாடி நரம்பு எலும்பு உடம்பு மனஸ் புத்தி என ஆழ்வார் பித்து பிடித்தவருக்கு இக்கட்டுரை பிடிக்கும்.]
கீதையில் கண்ணன் ஜீவாத்ம பேதம் 3 தான் சொன்னார். "நான்(கண்ணன்), நீ(அர்ஜுனன்), அவர்கள்(குருக்ஷேத்ரத்தில் போரிட நின்ற அரசர்கள்) அவ்வளவே. மாறாக நாச்சியார் வைகுண்டத்திலேயே 8 பேதம் சொல்கிறார். அது மட்டுமின்றி எம்பெருமானுக்கும் அனந்தமான கல்யாணகுணங்களை சொல்கிறார்.
ந த்வேவாஹம் ஜாது நாஶம் ந த்வம் நேமே ஜனாதிபா: |
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயம் அத பரம் || - ஸ்ரீமத் பகவத் கீதை -2-12
ஹே அர்ஜுனா ! கடந்த காலத்தில் நானும் இருந்தேன், நீயும் இருந்தாய், இதோ நாம் எதிரிலே காணும் இந்த அரசர்களும் இருந்தார்கள். எதிர்காலத்திலும் அவ்வாறே நானும், நீயும், இந்த அரசர்களும் இருக்கப்போகிறோம். ஏனெனில் நாம் அனைவருமே நித்யமான வேறு வேறு ஆத்மாக்கள் ஆவோம்.
இதில் அஹம் என்று கண்ணனான தன்னையும், த்வம்/நீ என்று அர்ஜுனனையும் இமே என அரசர்களை சொன்னார்.
இதே வேற்றுமையை வைகுண்டலோகத்திலும் கண்டதாக நாச்சியார் அருளுவதே துரீயநிலை என்னும் “பட்டிமேய்ந்து” பதிகமாகும்.
பட்டிமேயந்தோர் காரேறு பலதேவர்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீரிட்டு விளையாடி இங்கே போதக்கண்டீரே
இட்டமான பசுக்களை இனிதே மறித்து நீரூட்டி
விட்டுக்கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே – நாச்சியார் திருமொழி-14-1
வைகுண்டத்தில் பலரும் பலப்பல ரூபங்கள், உடல்கள் எடுத்து கண்ணன் எம்பெருமானின் அநுபவம் பெறுவர். அதனை “இங்கே போதக் கண்டீரே” என நித்யசூரிகளும்-முக்தர்களும் அனுபவிப்பது சொன்னாள். “விருந்தாவனத்தே கண்டோமே [கீதையின் வயம்-நாம் எனும் சொல்லை கண்டோமே என விவரித்தார்]” எனத் தன்னையும் அந்தக்கோஷ்டியுள் சேர்த்து சொன்னாள்.
ஆக எந்த காலத்திலும், எந்த தேசத்திலும், எந்த அவஸ்தையிலும் ஜீவாத்மாக்கள் வேறு வேறு. புருஷோத்தமனான கண்ணனும் வேறு எனக் காட்டுகிறார் நாச்சியார்.
“பாரின்மேல் விருந்தாவனத்தே கண்டமை”- என்ற வரியை பாரின்மேல் பருந்தாள் களிற்றுக்கு அருள்செய்த பரமன் தன்னை விருந்தாவனத்தே கண்டமை என்று அன்வயம் செய்தால் – அது வைகுண்டமே என தெளிவாகும்.
அஷ்டாத்யாயி நூலிலே காரகங்களை சொல்லும் பாணினி மஹரிஷி
கர்த்தா காரகம்
------------------------
ஸ்வதந்த்ர கர்த்தா – அஷ்டாத்யாயி- 1.4.54 [ஸ்வதந்த்ரமாக பணி செய்பவன் பெயர் *கர்த்தா*] என்றார். இதையே “பட்டிமேய்ந்து அங்கு ஓர் காரேறு” எனும் சொல்லால் கண்ணனின் ஸ்வாதந்த்ரியதா, புருஷோத்தமதா எனும் குணங்கள் சொல்லப்படுகிறது. பட்டி மேய்ந்து என்பது தனக்கு ஒரு நியந்தா-எஜமானன் இல்லாமல் தனது இஷ்டத்திற்கு செயல்கள் புரிவதாகும். இது லீலாவிபூதி-நித்யவிபூதி என இரண்டு இடங்களிலும் பொருந்தும்.
இது முதல் வேற்றுமை. காரேறு – கருத்த காளை எனும் கண்ணன் இப்பாசுரத்தில் கர்த்தா எனும் முதல் வேற்றுமை.
கர்ம காரகம்
----------------------
கர்து: ஈப்ஸிததமம் கர்ம: -அஷ்டாத்யாயி-1-4-49 [கர்த்தாவானவன் தனது இஷ்டத்திற்கு ஆப்ததமமாக ஆகும் சம்பந்தத்தின் பெயர் *கர்மம்*.]
அதாவது கர்த்தாவானவன் எந்த பதார்த்தத்தினை அடைய அத்யந்தமாக விரும்புகிறானோ அதனை கர்மம் என்பர்.
இதை “இட்டமான பசுக்களை[பசுக்கள் உருவில் பாரதந்த்ர்யம் பாராட்டும் ஜீவாத்மாக்கள்]” . இது இரண்டாம் வேற்றுமை. இங்கே பசுக்களே கர்மம் எனும் இரண்டாம் வேற்றுமை(ஐ என்று தமிழில்).
நளிர் மாமலர் உந்தி-14.9
தேனுகனும் களிறும் புள்ளும் உடன்மடிய – 14.9
வெளிய சங்கு ஒன்றுடையானை, பீதக ஆடை உடையானை -14.8
மாலே செய்யும் மணாளன், ஏலாப் பொய்கள் உரைப்பான்-14-3
என்னை ஈர்த்துக்கொண்டு விளையாடும் ஈசன்-14-4
கரண காரகம்
--------------------
ஸாதகதமம் கரணம்- அஷ்டாத்யாயி-1.4.43 [கிரியையானது சித்தியடைய ப்ரக்ருஷ்டமான-மிக மிக மிகத் தகுந்ததாய் உபகாரகம் எது செய்கிறதோ அதற்கு பெயர் *கரணம்* ஆகும்]
“மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப்பு”-14.3
“கார்த்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு”-14-4
அருத்தித்தாரா கணங்களால் ஆரப்பெருகு வானம்-14.7
இவை ஸ்பஷ்டமான கரணகாரணங்கள்
காம் விந்ததி இது கோவிந்த: என்று நிருக்தி சொல்வர். பசுக்களை தேடுபவன்-மேய்ப்பவன் கோவிந்தன் என்பது பொருள்.
ஸம்ப்ரதான காரகம்
--------------------------
கர்மணா யம் அபிப்ரைதி ஸ ஸம்ப்ரதானம் - அஷ்டாத்யாயி-1.4.32
தானம் போன்ற கிரியைகளினால் கர்த்தாவானவன் எதனை சம்பந்தம் செய்கிறானோ அதுவே ஸப்ரதானம் எனப்படும்.
பசுக்கள் எனும் ஜீவாத்மாக்களுக்கு ஆனந்தம் அளிக்கிறான். எனவே இங்கே பசுக்களே ஸம்ப்ரதானம் எனும் 4 ஆம் வேற்றுமை-(கு என்பர் தமிழில்)
க்ருஷ்ண = நிவ்ருத்தி ப்ராபயிதும் கர்ஷதி என . நிவ்ருத்தி எனும் மோக்ஷானுபவ இன்பத்தை ஏற்படுத்துபவன் என்று நிருக்தி சொல்வர்.
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த-14-9
இத்தொடர் 4 ஆம் வேற்றுமை. [நான்முகனுக்கு படைத்தல் தொழிலைத் தந்தமை]
பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த-14.10 [கஜேந்திராழ்வானுக்கு உபகாரம் செய்தது]
இனிது மறித்து நீரூட்டி விட்டுக்கொண்டு விளையாட-14.1 – நீரை ஊட்டுவது
அபாதான காரகம்
---------------------------
த்ருவம் அபாயே அபாதானம்- அஷ்டாத்யாயி-1.4.24 [தான் விரும்பும் பொருளானது எந்த திவவியத்திலிருந்து பிரிக்கப்படுவதால் சாத்தியமாகிறதோ அப்படி அவதி/எல்லைகட்டும் பதார்த்தத்தினை அபாதானம் என்று பெயர்.
அணுங்க என்னை பிரிவு செய்து –[என்னிடமிருந்து பிரிந்தான் கண்ணன்]
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர்மாமலர் உந்தி-14.9
அதாவது தனது உந்தியில் இருந்து தாமரையை படைத்து- இதிலிருந்து ஈரேழு பதினான்கு உலகங்கள், ஜீவராசிகள் படைத்துக்கொள் என தந்ததும் அபாதனம் தானே.
ஆக ப்ரபஞ்சத்திற்கு material cause/உபாதான காரணம்- கண்ணனே என நாச்சியார் சொல்கிறார்.
இனிது மறித்து நீரூட்டி விட்டுக்கொண்டு விளையாட-14.1
பசுக்களை மறித்து நீரூட்டியபிறகு பிரிந்துபோக விட்டுவிடுகிறான்.
அதிகரண காரகம்
------------------------------
ஆதாரோ அதிகரணம்- அஷ்டாத்யாயி-1.4.45 [செயல் செய்யப்படும் இடம் அதிகரணம் எனப்படும்]
விருந்தாவனத்தே கண்டோமே என 10 பாசுரங்களிலும் அதிகரணம் வருகிறது.
6 ஆம் வேற்றுமை
---------------------------
ஆறாம் வேற்றுமையை காரகத்தில் சேர்ப்பதில்லை. ஏனெனில் அது கார்யத்துடன் நேரடி ஸம்பந்தம் ஆகாது.
பலதேவற்கோர் கீழ்க்கன்றாய் -14.1
பொருத்தம் உடைய, வெளிய சங்கு ஒன்றுடைய, அளி நன்கு உடைய,
மாதவன் என் மணியினை-14-5
8 ஆம் வேற்றுமை
---------------------------
விளிவேற்றுமை – 8 ஆம் வேற்றுமை -இதனை சம்போதனம் என்பர்.
கண்டீரே, கண்டீரே என நித்யசூரியர், முக்தர்களை விளிக்கிறார் நாச்சியார்.
ஆக இப்படி 8 விதமான வேற்றுமைகள் வைகுண்ட மோக்ஷலோகத்தில் இருக்கிறது. அத்வைதம் பேசுபவர்களை என்னவென்று சொல்லி பரிகசிப்பது ? ஆத்மாவிற்கு குணங்களே இல்லை, வெறும் மாயை என்று மாயாவாதம் பேசுவோருக்கு தரும் பதிலே இது.
ஒரு செய்யுளுக்கு பதம் பிரித்து பொருள் சொல்லி பிறகு அன்வயம் தருவதற்கு காரகம் மிகவும் இன்றியமையாதது. க்ரியா நிமித்தத்வம் [வினைக்கு தொடர்பு ஏற்படுத்துவது] காரகத்வம் என்றும் க்ரியா அன்வயித்வம் காரகத்வம்[வாக்கியத்தில் கிரியையுடன் மற்ற சொற்களை வேற்றுமையைக் களைவது] என்றும் காரகத்திற்கு பொருள் சொல்வர்.
இது தொல்காப்பியம், நன்னூல் போன்ற நூல்களில் சுத்தமாக இல்லை. வேற்றுமை உருபு உண்டே தவிர காரகம் இல்லை. இந்த காரணம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தினைக் குறைக்கும். வடமொழி ஒன்றுக்கே செம்மொழி அந்தஸ்து உளது.
#ஆண்டாள்